ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ளாத அக்ஷய் குமார் - ஏன் தெரியுமா?
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் நடிகர் அக்ஷய் குமார் கலந்துகொள்ளவில்லை. ஏன் தெரியுமா?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகாவிற்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் நேற்று (ஜூலை 12) நடைபெற்றாலும் கடந்த ஒரு மாத காலமாக இவர்களுடைய திருமண நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக உலகையே வியந்து பார்க்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
![](https://i0.wp.com/news7tamil.live/wp-content/uploads/2024/07/postcard-2024-07-13T085817.766.webp?resize=1024%2C576&ssl=1)
இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகை தந்தனர். திருமண கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன. முக்கிய திருமண சடங்குகள் நேற்று திருமண விழாவுடன் தொடங்கியது. இந்தத் திருமண நிகழ்வுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது இந்தியில் 'சர்ஃபிரா' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நேற்று (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்த அக்ஷய் குமாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். படம் வெளியான அன்று அவரால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. மேலும், ஆனந்த் அம்பானி அக்ஷய் குமாரை நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்தார். ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக அக்ஷய் குமாரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.