புதிய யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம்!
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவராக இருந்த பிரீத்தி சூடானின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) புதிய தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயளாலர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது நியமனத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் இந்திய அரசியலமைப்பின் கீழ் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவராக அஜய் குமாரை நியமிப்பதில் குடியரசு தலைவர் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1985-ம் ஆண்டு ஓய்வு பெற்ற இந்திய நிர்வாக சேவை (IAS) கேரள கேடர் அதிகாரியான அஜய் குமார், ஆகஸ்ட் 23, 2019 முதல், அக்டோபர் 31, 2022 வரை பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியுள்ளார். அஜய்குமார் இந்த பொறுப்பில் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும் வரை நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.