நடுவானில் இயந்திர கோளாறு - அவரசமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் இரவு 8.15 மணிக்கு, புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கே.சி.வேணுகோபால், கொடி குன்னில் சுரேஷ், அடூர் பிரகாஷ், கம்யூனிஸ்ட் எம்.பி.கே.ராதாகிருஷ்ணன் உட்பட ஐந்து எம்பிக்கள் உள்ளிட்ட 181 பயணிகள் இருந்தனர்.
இந்த விமானம் இரவு 10 மணி அளவில், பெங்களூர் வான் வெளியை கடந்து நடுவானில் சென்ற போது, விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் இரவு 11 மணியளவில், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.
இதையடுத்து மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் எம்.பி.க்கள் மற்றும் பயணிகள் அனைவரும் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள விமான நிலைய போக்குவரத்து ஆணையகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.