ஏர் கனடா விமான ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவு!
கனடாவின் பெரிய விமான நிறுவனம் ஏர் கனடா ஆகும். இந்த நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரம் பணிப்பெண்கள் வேலை பார்க்கின்றனர். ஏர் கனடாவானது உலகெங்கிலும் 180 நகரங்களுக்கு நேரடியாக விமான சேவை வழங்குகிறது. இந்த நிலையில், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் கனடாவின் விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான நிலைய ஊழியர்கள் ஆகியோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட நாட்களாகவே விமான ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏர் கனடாவின் விமான சேவை பெருமளவு பாதிக்கப்பட்டது. மேலும் இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பாதிப்பு அடைந்தனர்.
இந்த நிலையில் ஏர் கனடா ஊழியர்கள் சங்கத்துடன் விமான நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏர் கனடாவின் விமான சேவை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.