“மகளிர் உரிமைத்தொகை திட்டம் வர காரணம் அதிமுக” - இபிஎஸ் பேச்சு
மகளிர் உரிமைத்தொகை திட்டம் கொண்டுவர காரணமாக இருந்தது அதிமுக என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பம்பாளையத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :
“எடப்பாடி தொகுதி அதிமுகவின் கோட்டை. எடப்பாடியில் உள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு எம்.எல்.ஏ. ஆகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் பார்க்கிறேன். எடப்பாடி மக்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு முன்மாதிரி சட்டமன்ற தொகுதி எடப்பாடி. தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யும்போது அதிமுகவின் அலை வீசுகிறது. எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் நமது வேட்பாளரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள் : முதலில் அமித்ஷா... அடுத்து பிரதமர் மோடி... - தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு விசிட் அடிக்கும் பாஜக தலைவர்கள்!
தமிழகத்தில் அதிமுகவில் தான் பூத் வாரியாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் உபரி நீர் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த திட்டத்தை முடக்கி வைத்துள்ளனர். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வர காரணமாக இருந்தது அதிமுக”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.