தேமுதிகவிற்கு பச்சைக்கொடி காட்டிய அதிமுக... எம்.பி ஆகிறாரா சுதீஷ்?
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்.பி.க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் எம்.பி.யான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனைத்தொடர்ந்து காலியாகும் இந்த ஆறு இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து திமுக போட்டியிடும் நான்கு இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதி மக்கள் நீதி மையத்திற்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் அதிமுக கூட்டணியில் இன்னும் மாநிலங்களவை வேட்பாளர்கள் குறித்தான அறிவிப்பு வெளியாகவில்லை. அதேசமயம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும், அப்போதே, ஒரு மாநிலங்களவைக்கும் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், எனவே தற்போது ஒரு இடம் தங்கள் கட்சிக்கு வழங்கப்படும் எனவும் தேமுதிக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அதிமுக இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் தேமுதிக ஒரு சீட் தர அதிமுக ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு இன்று (30ஆம் தேதி) இரவு திடீரென தேமுதிக சுதீஷ் சென்றுள்ளார். அங்கு அவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்கப்படுவது உறுதி எனும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரு நாள்களாக நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிகவுக்கு சீட் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே தற்போது சுதீஷ் – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிகழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கி நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் சொல்லப்படுகிறது.