அகமதாபாத் விமான விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு!
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம்(ஜூன்.12) லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பிஜே மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விபத்துக்குள்ளான விமானத்தில் ஏர் இந்தியா அளித்த தகவல்படி, 230 பணிகள், 12 பணியாளர்கள் இருந்தனர்.குறிப்பாக அதில் இந்தியாவைச் சேர்ந்த 169 பேர், 53 பிரிட்டனை சேர்ந்த 53 பேர் , போர்ச்சுகலைச் சேர்ந்த 7 பேர், கனடாவைச் சேந்த ஒருவர் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். இந்த கோர விபத்தில் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்க, முன்னதாக கிடைத்த தகவலின்படி குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் பிஜே மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியவர்கள் உட்பட மொத்தம் 265 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது.
அதன் பின்னர் விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த உடல்கள் மீட்பு பணி நடைபெற்று வந்தது. இதனிடையே விபத்து குறித்து கண்டறிய விமானத்தின் தரவுகளை பதிவு செய்யும் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் கீழ் செயல்படும் தடயவியல் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி இதுவரை 270 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.