"விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ள வேளாண் பட்ஜெட்" - ஓபிஎஸ் விமர்சனம்!
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மகளிர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து இன்று 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது என முன்னான் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக ஓபிஎஸ் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"உழவுத் தொழில் வேறு தொழில் புரிபவர்களுக்கு எல்லாம் உணவளித்துத் தாங்குவதால் உழவர்கள் உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்கள் என்றார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட அச்சாணி போன்றவர்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அவர்கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் இடம்பெறாதது உழவர்கள் மத்தியில் மிகப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டுமல்லாமல், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களும் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்கேற்ப, உதாரணத்திற்கு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 2021-2022 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கை பக்கம் 25-ல், பருத்தி வரத்து அதிகம் உள்ள திருவாரூர் பகுதி விவசாயிகள் பயனடைவதற்காக திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் ஆலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
2025-2026 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கை என்பது விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ள நிதி நிலை அறிக்கை! pic.twitter.com/IHe7fISzxg
— O Panneerselvam (@OfficeOfOPS) March 15, 2025
இந்த அறிவிப்பு செய்யப்பட்டு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு இன்னமும் காகித வடிவிலேயே உள்ளது. திமுக அரசால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இந்த நிலையில்தான் உள்ளன. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அளித்தது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், இந்த வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை.
தற்போது, நெல்லுக்கான குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் அளிக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இது குறித்து இந்த ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஏதும் இடம் பெறாதது விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோன்று, கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது. இதுகுறித்து எந்த ஓர் அறிவிப்பும் இடம் பெறாதது கரும்பு விவசாயிகளிடையே மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது.
தற்போது கரும்புக்கான ஆதார விலையாக குறைந்தபட்சம் டன் ஒன்றுக்கு 5,000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டுமென்று விவசாயப் பெருமக்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தவில்லை என்றால், கரும்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் நிலைதான் ஏற்படும். வேளாண் நிதிநிலை அறிக்கையுடன், அதற்கான முக்கிய நோக்கங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டு இருந்தாலும், அந்த நோக்கங்களை அடைவதற்கான திட்டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இல்லை.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துக்கள், பயறுவகைகள், நெல், பருத்தி, கரும்பு, பலா, தென்னை, பனை, முந்திரி, காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற அனைத்து பயிர்களுக்குமான திட்டங்கள் ஒரு நோக்கமாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான எந்த அறிவிப்பும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்பதுதான் யதார்த்தம்.
2024-2025 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை பக்கம் 42-ல், தென்னந்தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராக பயிரிட கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், இத்திட்டம் எட்டாயிரம் ஏக்கரில் மூன்று கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.
2024-2025 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை அறிக்கையில், 2 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கர் பரப்பில், ஒரு லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், மத்திய அரசு நிதி உதவியுடன் 773 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், மூன்று லட்சம் ஏக்கரில் 1,168 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், புதிதாக இந்த ஆண்டும், இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறதா அல்லது சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவேற்றப்படாத நிலையில், மீண்டும் இந்த ஆண்டு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் 360 ஏக்கர் நிலப்பரப்பில் தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்; தென் தமிழகத்திற்கென மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கக்கூடிய, வேளாண் உற்பத்தியை பெருக்கக்கூடிய திட்டங்கள் ஏதுமில்லாத அறிக்கையாக வேளாண் நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது"
இவ்வாறு முன்னான் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.