4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சி .. 111-வது அத்தியாயத்தில் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றினார்!
4 மாதங்களுக்கு பிறகு மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜூன் 09 அன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி உட்பட 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
மனதின் குரல் என்னும் மான் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் கடந்த அக்டோபர் மாதம் முதல் நாட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். பிப்ரவரி மாதம் 25ம் தேதி 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பான நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 111வது அத்தியாயம் தொடங்கியது. அப்போது பேசிய பிரதமர் மோடி, உலக சுற்றுச்சூழல் தினமான இன்று தனது தாய் பெயரில் ஒரு மரத்தை நட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து சமூகத்தில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும், அடுத்த மாதம் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துமாறு நாட்டு மக்களிடம் அவர் கேட்டு கொண்டார்.