நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தான் - உதவிக்கரம் நீட்டிய இந்தியா!
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்
6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமானது. இரவில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
இதுவரை 800க்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஆப்கனிஸ்தானுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் முத்தகியுடன் பேசினேன். நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காபூலில் இன்று 1000 குடும்ப கூடாரங்களை இந்தியா வழங்கியது. காபூலில் இருந்து குனாருக்கு இந்திய தூதரகம் 15 டன் உணவுப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவிலிருந்து மேலும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு துணை நிற்கிறது" என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரதமர் மோடியும் ஆப்கனிஸ்தானுக்கு உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.