அப்சரா ரெட்டிக்கு ரூ.50லட்சம் நஷ்டஈடு - ஜோ மைக்கேல் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
அதிமுக செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கும் உத்தரவை எதிர்த்து யூ டியூபர் ஜோ மைக்கேல் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக செய்தி தொடர்பாளராக இருப்பவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூ டியூபில் வெளியிட்டு களங்கம் விளைவித்ததாக கூறி, பிரபல யூடியூபரான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், யூடியூபில் கருத்துக்களை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும், அது மற்றவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிட முடியாது எனக் கூறி, அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் தனது தரப்பு விளக்கம் ஏதும் கேட்காமல், ஒரு தரப்பு வாதத்தை கேட்டு
பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என யூ டியூபர் ஜோ மைக்கேல்
பிரவீன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வழக்கு தொடர்ந்ததும், நோட்டீஸ் அனுப்பப்பட்டதும் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு தெரியும் எனக் கூறி, அதற்கான ஆதாரங்கள் அப்சரா ரெட்டி தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி சதீஷ்குமார், நீதிமன்றத்தில் இருந்து
நோட்டீஸ் பெற்றதை அடுத்து வழக்கறிஞரை நியமித்த ஜோ மைக்கேல் பிரவீன், அதன் பின் வழக்கு விசாரணையில் பங்கேற்காத நிலையில், வழக்கில் நோட்டீஸ் ஏதும் வரவில்லை எனக் கூற முடியாது எனத் தெரிவித்தார். மேலும் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.