தனக்குத் தானே கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம்!
‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரை நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் நடிகர் ராஜேஷ். 150க்கும் மேலான படங்களில் நடித்து கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்தார்.
நடிகர் ராஜேசுக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்னை இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 29) காலை அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இவருக்கு வயது (75). ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, இன்று (மே 31) மதியம் 1 மணியளவில் நடிகர் ராஜேஷின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பின்பு அசோக் நகரில் உள்ள வெற்றி சிலுவை சர்ச்சிக்கு ராஜேஷின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு இறுதி திருப்பலி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது உடல் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
அங்கு அவர் ஏற்கனவே கட்டிவைக்கப்பட்ட கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராஜேஷின் அம்மா, அப்பா மற்றும் மனைவி ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையிலே ராஜேஷின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.