தவெகவில் இணைய விருப்பம் தெரிவிக்கும் நடிகர் பார்த்திபன்?
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், கடந்தாண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். விஜய் கட்சி தொடங்கியதற்கு பல நடிகர்களும் ஆதரவு தெரிவித்தனர். அந்த வரிசையில் கட்சி தொடங்கியதிலிருந்தே விஜய்க்கு ஆதரவாக பேசி வருபவர் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.
தொடர் ஆதரவைத் தொடர்ந்து தவெகவில் இணையப் போகிறீர்களா? என பலரும் கேள்வி எழுப்பியதற்கு, “விஜய் அழைத்தாலும் அவரது கட்சியில் சேரமாட்டேன்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமது எக்ஸ் பக்கத்தில் பார்த்திபன் ஒரு பதிவிட்டுள்ளார். அது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தப் பதிவில்,
“நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால் ….. அது கனவு!
ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனா சத்தியமா வந்தது. கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள் …இப்படி சில பல! காரணமாக இருக்கலாம்” என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவை பார்க்கும் இணையவாசிகள் தவெகவில் இணைய விருப்பம் தெரிவிக்கறீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.