முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சாதனைகள் பற்றி பேச அறிவோ, வயதோ எனக்கு இல்லை - நடிகர் தனுஷ் பேச்சு!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சினிமா மற்றும் அரசியல் சாதனைகள் பற்றி பேச அறிவோ, வயதோ எனக்கு இல்லை. முதன்முதலில் நான் அவரை பார்க்கும் போது ’வாங்க மன்மதராஜா’ என்று சொன்னார் என நடிகர் தனுஷ் கலைஞர் 100 விழாவில் பேசினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறை சார்பில் கலைஞர் 100 விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக இன்று (டிச. 06) நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 22000 சீட்டுகள் அமைக்கப்பட்டு 1000த்திற்க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். மேலும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவக்குமார், தனுஷ், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, ஷிவ் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் நடிகைகள் கௌதமி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன் ராஜா, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் விஜய் மற்றும் அஜித் கலந்து கொள்ளவில்லை.
இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ் பேசியதாவது:
“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சினிமா மற்றும் அரசியல் சாதனைகள் பற்றி பேச அறிவோ, வயதோ எனக்கு இல்லை. முதன்முதலில் நான் அவரை பார்க்கும் போது ’வாங்க மன்மதராஜா’ என்று சொன்னார். அப்போது தான் தெரிந்தது என்னுடைய படங்கள் எல்லாம் பார்க்கிறார் என்று. என்னுடைய படத்துக்கு அவரை அழைக்க சென்றேன். அந்த அழைப்பை பார்த்தவுடன் படத்தின் கதையை முழுக்க சொல்லிட்டார். அந்த அளவுக்கு திறமை வாய்ந்தவர்.
எந்திரன் படத்தை அவருடன் சேர்ந்து பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படத்தை அவ்வளவு ரசித்து பார்த்தார். வர் இன்னும் நம்மளோட தான் இருக்கிறார். நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும் என்று சொன்ன கருணாநிதியின் வரிகள் படி நாமாக வாழ்வோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.