“உங்கள் அன்பும் ஊக்கமும் எனது விடாமுயற்சிக்கு உந்து சக்தியாக உள்ளது” - நடிகர் அஜித்குமார் நெகிழ்ச்சி!
சினிமாவிலும் ஸ்போர்ட்ஸிலும் ஆர்வமிக்கவராக இருக்கும் அஜித்குமார், தற்போது மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். ஸ்போர்ட்ஸை பொறுத்தவரை ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கியுள்ளார். இந்த அணி துபாயில் நடைபெற்ற கார் ரேசில் பங்கேற்று 992 பிரிவில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது.
அதைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அஜித் குமாருக்கும் அவரது அணியினருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே அஜித்குமார் தொடர்ச்சியாக பேட்டிகளில் ரசிகர்களின் நலன் கருதி குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள், உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் என்று பேசி வருகிறார்.
இந்நிலையில் அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துபாய் கார் பந்தய ரேஸின் போதும், நிகழ்வுக்குப் பின்னரும், இப்போதும், எப்போதும் நீங்கள் எனக்குக் கொடுத்து வரும் ஆதரவும், ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.
இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும், விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார் ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன், அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.