சென்னை வெள்ளத்தில் உடைமைகளை இழந்த பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை, புத்தகங்கள் வழங்க நடவடிக்கை!
மழையால் உடமைகளை இழந்த பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 4 மாவட்டங்களிலும் வரும் 11-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் ஆய்வு செய்து விஷ ஜந்துக்கள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்,
மின்கசிவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழையால் உடமைகளை இழந்த மாணவர்களுக்கு புதிய சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.