"ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்!" - சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுள்ள அருண் பேட்டி!
ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என சென்னை மாநகர ஆணையராக பதவியேற்றுள்ள அருண் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் உட்பட பலரும் தமிழ்நாட்டின் சட்ட - ஒழுங்கு குறித்து விமர்சனம் முன்வைத்தனர்.
தமிழ்நாடு காவல்துறை மீதும் எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையே, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமியின் டி.ஜி.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள் :“யுவராஜ் சிங்கிற்கு பெருமை சேர்த்துள்ளேன்..” - சதம் விளாசிய அபிஷேக் சர்மா புகழாரம்!
புதிய சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட அருண் இதற்கு முன்பு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தார். அவர் ஏற்கனவே பரங்கிமலை காவல்துறை துணை ஆணையர், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு, டி.ஐ.ஜி, ஐ.ஜி. ஆகிய பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார். இறுதியாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் சென்னை மாநகர காவல் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதையடுத்து புதிய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:
"சென்னை எனக்கு புதிதல்ல. சென்னையில் உள்ள குற்ற சம்பவங்கள் மற்றும் ரவுடிகளை கட்டுப்படுத்துவது காவல்துறையில் நடைபெறும் தவறுகளை கட்டுப்படுத்துவது தான் முதல் வேலை. ரவுடிகளை ஒழிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக கருத்து சொல்ல விரும்பவில்லை. சென்னையில் உள்ள போக்குவரத்து சிக்கல்கள் விரைவில் சரி செய்யப்படும்.இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும். என்னை நம்பி இந்த பொறுப்பு கொடுத்திருக்கிற தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அரசுக்கும் நன்றி" இவ்வாறு அவர் கூறினார்.