“டெல்லியில் இந்தியா கூட்டணியின் தோல்விக்கு ஆம் ஆத்மிதான் காரணம் ” - காங்கிரஸ் குற்றச்சாட்டு!
“ஆம் ஆத்மியின் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் குற்றச்சாட்டுதான் டெல்லியில் காங்கிரஸ் தோல்வியடைய காரணம்” என காங்கிரஸ் தேசிய செயலாளர் அபிஷேக் தத் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதனையடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். இத்தேர்தலில் தமிழ்நாடு, பஞ்சாப், மணிப்பூர், மிசோரம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் ஒரு தொகுதியை கூட பாஜக கைப்பற்றவில்லை. அதுபோல ஆந்திரா, டெல்லி, அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், திரிபுரா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை.
“மதுபான கொள்கை முறைகேடு ஊழலை அம்பலப்படுத்தியது காங்கிரஸ்தான். முறையான விசாரணை நடத்த அப்போதைய அரசிடம் கோரிக்கை வைத்தோம். வழக்குப் பதிவு செய்து 18 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அமலாக்கத்துறையும், சிபிஐயும் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
இந்த மதுபான கொள்கை முறைகேடால்தான் இந்தியா கூட்டணி டெல்லியில் தோல்வியை தழுவியது. தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றிப் பெற்றிருப்போம். ஊழலில் ஈடுபட்டதால்தான் ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் சிறையில் உள்ளனர். தற்போது அமைச்சர் அதிஷி தர்ணாவில் ஈடுபட்டு நாடகம் நடத்தி வருகிறார்” என கூறினார்.