“திருச்சி அருகே ஒரு கிராமமே வக்ஃபு சொத்து” - சம்பந்தப்பட்ட கிராமம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதம்!
புதிய வக்ஃபு சட்டம் தொடர்பான வழக்கு கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றபோது, அதற்கு எதிராக அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் உள்ளிட்ட உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்பினர்.
இந்த நிலையில் புதிய வக்ஃபு சட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று(மே22) நடைபெற்றது.
மத்திய அரசு தரப்பு:
பல பழங்குடியின மக்களின் நிலங்கள் வக்ஃபு பெயரில் அபகரிக்கப்பட்டுள்ளன, அது தொடர்பான புகார்களும் உள்ளன. அந்த பழங்குடியின மக்கள் சார்பாக மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.பழங்குடியின மக்களின் நிலங்களை அபகரிப்பது என்பது மிகவும் கொடூரமான செயல் இல்லையா? அரசியலமைப்புக்கு எதிரானது இல்லையா?
ஷரியா சட்டத்தை எடுத்துக்கொண்டோம் என்றால், ஒருவர் தனிநபர் சட்டத்தின் பயன்களை பெற வேண்டும் என்றால் தான் ஒரு இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதையே தான் வக்ஃப் சட்டத்திலும் கோரியுள்ளோம்.
வக்ஃபு வாரியத்துக்கு இஸ்லாமியர் அல்லது இஸ்லாமியர் அல்லாதவர் தலைவராக நியமிக்கப்படுவது என்பது நிர்வாக ரீதியிலானது. சில நேரத்தில் நிர்வாகம் செய்ய அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை என அரசு விரும்பினால் அதனை செய்யலாம். இது ஒரு பரந்த நோக்கத்துடன் வரையறுக்கப்பட்டது.
புதிய வக்ஃபு சட்டத்தை பொறுத்தவரை எந்த அரசியலமைப்பு மீறலும் இல்லை, எனவே சட்டத்தை அமல படுத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் நீக்க வேண்டும்.
புதிய வக்பு சட்டத்துக்கு ஆதரவான மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி மற்றும் ரஞ்சித் குமார் :-
Waqf by user என்பது இஸ்லாம் மதத்தின் ஒரு அத்தியாவசியமான அங்கம் கிடையாது. ஒரு நபர் தனது சொந்த சொத்தை மட்டுமே வக்ஃபு-க்கு வழங்க முடியும் என இஸ்லாமிய சட்டம் குறித்து குரான் மற்றும் முல்லாவின் புத்தகம் கூறுகிறது
வக்ஃபு வாரியத்தக்கு எதையும் வக்ஃபு என்று அறிவிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஒருவேளை அந்த அறிவிப்பில் பிரச்சனை எழும் என்றால் அது தொடர்பாக தீர்ப்பாயத்துக்கு செல்ல வேண்டும். அதேவேளையில் வக்ஃபு அறிவிப்பை யாரும் எதிர்க்கவில்லை என்றால் வக்ஃபு வாரியத்தின் தீர்ப்பு இறுதியானதாகிவிடும். ஆனால், தற்போது தற்போது அந்த முடிவெடுக்கும் அதிகாரம் தீர்ப்பாயத்திடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
புதிய வக்ஃபு சட்டத்துக்கு எதிரான மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன்:-
வக்ஃபு என்பது இஸ்லாமின் ஒரு அத்தியாவசிய மத நடைமுறையா? இல்லையா? என்பதை தீர்மானித்த பின்பே இடைக்கால உத்தரவை நீக்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்.
எனவே வக்ஃபு இஸ்லாம் மதத்தின் ஒரு அத்தியாவசியமான மத சடங்கு நடைமுறையா? என்ற கேள்வி தொடர்பாக முடிவு செய்ய 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அந்த கேள்வியை பரிந்துரைக்க வேண்டும்.
அதற்கு மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
புதிய வக்ஃபு சட்டத்துக்கு எதிரான மனுதாரர் சார்பில் கபில் சிபல் பதில் வாதம் :-
வக்ஃபு சொத்து தொடர்பாக ஒரு பிரச்னை எழும்போது முதலில் அந்த சொத்து பிரச்னைக்கு விடை காணும் வரை அந்த சொத்து வக்பு சொத்தாக கருதப்படாது. என்று அறிவிக்கப்படும். அதே வேளையில் அந்த காலகட்டத்தில் அந்த சொத்து என்பது அரசு சொத்தாக கருதப்படும் என புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எவ்வளவு கால அளவுக்குள்ளாக அந்த சொத்து மீது முடிவெடுக்க வேண்டும் என்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற எந்த ஒரு நிர்ணயமும் இல்லை.
நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் :-
சொத்து மீது விசாரணை தொடங்கியதில் இருந்து, அறிக்கை சமர்பிக்கப்படும் வரை அது வக்ஃபு என்ற அந்தஸ்தை இழந்து விடும் தானே?
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்:-
ஆம், அந்த சொத்து மீது முடிவெடுக்கும் வரை காலவரையின்றி அவ்வாறு வக்ஃபு என்ற அந்தஸ்தை இழந்து விடும். எந்த ஒரு நிலத்தையும் அரசு தன்னுடையது என கூறி எடுத்துக் கொள்ளும் ஒரு நிலையை இந்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது. அதன்படி வக்ஃபு ஆக 200 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் இடுகாடுகளை கூட அரசு தனது நிலம் என்று கூறி எடுத்துக் கொள்ள முடியும்.
கபில் சிபல். :-
மற்ற மதத்தினர் தொண்டு செய்கின்றனர். இங்கு கடவுளுக்கு அர்ப்பணிப்பு. ஒரு முறை கொடுத்தால் அதனை திரும்பப்பெற முடியாது.
மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான்:-
வக்ஃபு-வின் அத்தியாவசியம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வக்ஃபு என்பது ஈகையின் ஒரு பகுதி. இஸ்லாம் மதத்தின் முக்கிய தூண்களின் ஒன்று. மேலாண்மை என்ற பெயரில் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது மத வழிபாட்டு உரிமைகளில் தலையிடும் செயல்
தலைமை நீதிபதி :-
இங்கு கூறப்படுவதுபோல, சொர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாமல் அனைவரும் சொர்க்கம் செல்ல விரும்புகிறோம்.
மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி:-
முன்பு மத்திய அரசு வாதிடும்போது சட்டத்தால் வழங்கப்பட்டது அதை சட்டத்தின் மூலம் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டது என்று கூறினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த சட்டங்கள் என்பது பிரபுக்களைப் போல செயல்பட முடியாது
Waqf by users என்பது இஸ்லாமின் அத்தியாவசியமான ஒரு கருப்பொருள். அந்தக் கருத்தை அங்கீகரிப்பது என்பது சட்டத்தின் மூலம் அல்ல. எந்த மதமும் ஒருவரின் நம்பிக்கைக்கு சான்று கேட்பதில்லை. அந்த வகையில் இஸ்லாமியர்கள் 5 ஆண்டுகள் இஸ்லாமை பின்பற்ற வேண்டும். அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கோ வெளிப்படுத்துவதற்காகவோ எந்த சட்டமும் இல்லை. சுருங்கச் சொன்னால் இந்த புதிய வக்ஃபு சட்டம் இவ்வாறு கூறுவது என்பது ஒரு ஆதாரச் சுமை. எந்த மதத்திற்கும் விதிக்கப்படாத இந்த நிபந்தனை இஸ்லாமுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையின் மீறல்.
திருச்செந்துறை கிராம மக்கள் சார்பாக வழக்கறிஞர் பிரியதர்ஷினி :-
தமிழ்நாட்டின் திருச்சி நகருக்கு அருகே இருக்கக்கூடிய திருச்செந்துறை என்னும் ஒரு கிராமமே வக்ஃபு சொத்து என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது. பழமையான சோழர்காலத்தில் ஆதித்தியா சோழனால் கட்டப்பட் கோயில் கூட வக்பு என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது. எனவே இது போன்று பல கிராமங்கள் பல மக்கள் வக்பு நடைமுறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.