காஷ்மீரில் ஓட்டுநர் இல்லாமல் 70 கி.மீ. ஓடிய ரயில்... பெரும் விபத்து தடுப்பு!
காஷ்மீரில் ஓட்டுநர் இல்லாத சரக்கு ரயில் ஒன்று 70 கி.மீ தொலைவு வரை ஓடிய நிலையில், பஞ்சாபில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு, காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் 53 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் நேற்று (பிப்.25) காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த ரயிலின் ஓட்டுநர் ஹேண்ட் பிரேக் போட மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த சரக்கு ரயில் நகரத் தொடங்கியது. சரிவான பகுதி என்பதால் அந்த ரயில் வேகமாக ஓடத் தொடங்கியது.
தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் கதுவா ரயில் நிலையத்திலேயே சரக்கு ரயிலை நிறுத்த முயன்றனர். ஆனால் எந்த ஓட்டுநராலும் ரயிலில் ஏற முடியவில்லை. அங்கிருந்து ரயில் புறப்பட்டு சுமார் 70 கி.மீ. வேகத்தில் தண்டவாளத்தில் ஓடியது. உடனடியாக சரக்கு ரயில் சென்ற பாதையில் இருந்த அனைத்து ரயில்களும் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டன.
அனைத்து ரயில்வே கேட்டுகளும் மூடப்பட்டு வாகனங்கள், பொதுமக்கள் தண்டவாளத்தை கடப்பது தடுக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. பஞ்சாபின் பதான்கோட் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலை நிறுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தண்டவாளத்தில் மரத் தடுப்புகள் அமைக்கப்பட்டு ரயிலை நிறுத்த முயன்றனர். ஆனால் தடுப்பை உடைத்து சரக்கு ரயில் வேகமாக ஓடியது.
பதான்கோட் கன்டோன்மென்ட், கன்ட்டோரி, மிர்தால், பங்களா, முகேரியன் ஆகிய ரயில் நிலையங்களிலும் மரத்தடுப்புகள், மணல் மூட்டைகள் மூலம் சரக்கு ரயிலை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. எனினும் ரயிலின் வேகம் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இறுதியில் 70 கி.மீ தொலைவில் பஞ்சாபின் உஞ்சி பஸ்ஸி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் ரயில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.