For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குவைத் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து - தமிழர்கள் உட்பட 40பேர் உயிரிழப்பு!

04:22 PM Jun 12, 2024 IST | Web Editor
குவைத் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து   தமிழர்கள் உட்பட 40பேர் உயிரிழப்பு
Advertisement

குவைத் நாட்டின் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.  இதில் தமிழர்கள் உட்பட 40பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது.  இதில் குறைந்தது தமிழர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேர் இந்தியர்கள் எனவும் கூறப்படுகிறது.

குவைத் நாட்டு நேரப்படி  இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆறு மாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் திடீரென தீப்பற்றியது.  இதனைத் தொடர்ந்து  தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது.  இந்தக் கட்டடத்தில் சுமார் 195-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

கேரளத்தை சேர்ந்த தொழிலதிபர் கேஜி ஆபிரஹாமுக்குச் சொந்தமான கட்டடமென மலையாள பத்திரிகையான மனோராமா தெரிவித்துள்ளது.  அதே போல கே.ஜி.ஆபிரஹாமின் என்பிடிசி  சூப்பர் மார்கெட் ஊழியர்களும் இந்தக் கட்டடத்தில் தங்கியுள்ளனர்.

இந்த தீவிபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 50 பேர் காயமுற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.  தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தடயவியல் நிபுணர்கள் தீயில் எரிந்த பகுதிகளில் தடயங்களை சேகரித்து வருவதாகவும் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தை பார்வையிட்ட குவைத் துணை பிரதமர் பஹத் யூசுப் அல்- சபா இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.  கட்டட உடைமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாவது..

“ குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.  இத்தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நமது தூதரகத்தில் இருந்து மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.  இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்திய தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்” என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement