“ஹஜ் பயணம் ரத்து செய்யப்பட்டதில் தீர்வுகாண வேண்டும்” - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
ஹஜ் புனிதப் பயணத்திற்கு தயாராகி வரும் தமிழ்நாடு உட்பட ஆயிரக்கணக்கான இந்திய இஸ்லாம் ஹஜ் பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “கடந்த 2024 ஆம் ஆண்டில் சுமார் 1,75,000 இந்திய ஹஜ் பயணிகள் புனிதப் பயணத்தில் பங்கேற்றனர் இதற்காக ஜனவரி 2025-இல், இந்தியா சவுதி அரேபியாவுடன் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, 1,75.025 ஹஜ் பயணிகளுக்கான ஒதுக்கீட்டை இறுதி செய்தது. இந்த ஒதுக்கீடு 70:30 என்ற விகிதத்தில் மாநில ஹஜ் கமிட்டிகள் மற்றும் தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களிடையே பிரிக்கப்பட்டது. அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான மாநில மஜ் குழுக்களுக்கு 122,517 இடங்களும், தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு 52,507 இடங்களும் ஒதுக்கப்பட்ட நிலையில், சவுதி அரேபியா திடீரென இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை குறைத்துள்ளது.
அதன் காரணமாக தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 52.000 ஹஜ் இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது இந்த முடிவு ஏற்கனவே பணம் செலுத்தியுள்ள ஹஜ் பயணிகளை ஆழ்ந்த கவலையிலும் நிச்சமற்ற நிலையிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலைமையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சனையை அவசரமாக சவூதி அரேபிய அரசிடம் எடுத்துச்சென்று விரைவான தீர்வினைப் பெறவேண்டும்.
பிரதமரின் தலையீடு, ஹஜ் ஒதுக்கீட்டில் முந்தைய அளவினை மீண்டும் கொண்டுவந்து, ஹஜ் பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதியை அளிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வெளியுறவுத்துறை அமைச்சர் செய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதைடுத்து 10,000 இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஹஜ் விசா வழங்க சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.