Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கர்நாடகாவில் 8 கி.மீ ஓடி கொலையை தடுத்த மோப்ப நாய்!

07:38 PM Jul 19, 2024 IST | Web Editor
Advertisement

கர்நாடகாவில் கொலை செய்து வீசப்பட்ட உடலை மோப்பம் பிடித்து, 8 கி.மீ தூரம் தொலைவுக்கு ஓடி கொலையாளியின் மற்றொரு கொலையை தடுத்துள்ளது துங்கா-2 என்ற காவல் மோப்ப நாய். 

Advertisement

கர்நாடக மாநிலம் தேவநகரி மாவட்டத்தில் கடந்த புதன்கிழமையன்று சாலையோரம் ஒரு இளைஞரின் உடல் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் வந்துள்ளது. தகவலையடுத்து துங்கா-2 என்ற மோப்ப நாயோடு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர் காவல்துறை. இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் வந்த வாசனையை மோப்பம் பிடித்து, குற்றவாளி சென்ற திசையை நோக்கி ஓடியுள்ளது மோப்ப நாய்.

அடர்ந்த இருட்டில், கொட்டும் மழையில், மோப்பம் பிடித்துச் செல்வது மிகவும் சவாலானது என்ற நிலையிலும், துங்கா-2 எங்குமே தனது திறன் சளைத்ததில்லை என்பதை நிரூபித்தது. சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடி, ஒரு வீட்டு வாயிலில் நின்றது. தலைமைக் காவலர் சஃபியுல்லா உள்ளிட்ட காவல்துறையினர், துங்கா-2 நின்ற வீட்டின் வாயில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு ஒருவர் தனது மனைவியை கட்டையால் அடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் ஓடிச் சென்று காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.

கொலையாளி, தனது மனைவியைக் கொல்வதிலிருந்து துங்கா காப்பாற்றிவிட்டது. கொலைக் குற்றவாளியையும் காட்டிக்கொடுத்துள்ளது. இதனால், 30 வயதாகும் அழகுக் கலை நிபுணர் ரூபா உயிர்தப்பினார். ஒருவேளை நீங்கள் தடுக்காவிட்டால், நான் அவரது காதலனைக் கொன்றது போல, இவளையும் கொன்றிருப்பேன் என்று கத்திக்கொண்டே இருந்திருக்கிறார் கொலையாளி ரங்கசாமி. இவர் தாக்கியதில், பலத்த காயமடைந்த ரூபாவுக்கு அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு, கிட்டத்தட்ட அவர் நினைவிழந்த நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

ரூபாவின் காதலர் என ரங்கசாமி சந்தேகிக்கும் சந்தோஷ் குமாரை (30) சன்னபுராவில் உள்ள விடுதியிலிருந்து அழைத்துச் சென்று கொன்று, உடலை சந்தேபென்னூர் சாலையோரம் வீசியிருக்கிறார். அங்கு விசாரணைக்குச் சென்ற துங்கா, ரங்கசாமியின் வாசனையை மோப்பம் பிடித்துக்கொண்டு, நேராக காவலர்களுடன் அவரது வீட்டுக்கே வந்திருக்கிறது.

வழக்கமாக ஒரு சில நூறு மீட்டர்கள் ஓடிச் சென்று திரும்பி வரும் மோப்ப நாய்களைப் போல அல்லாமல், துங்கா-2 திடீரென வேகம் எடுத்தது. நேராக குற்றவாளி இருந்த இடத்துக்கே காவல்துறையினரைக் கூட்டிச்சென்றுவிட்டது என்கிறார்கள் காவலர்கள். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்,

காவல்துறை மோப்ப நாய் படையில் ஏற்கனவே துங்கா என்ற மோப்ப நாய் இருந்தது. அது கிட்டத்தட்ட 70 கொலை வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிக்க உதவியிருக்கிறது. அது 2022ஆம் ஆண்டு இறந்துவிட்டதால், அதன் நினைவாகத்தான் இந்த நாய்க்கு துங்கா-2 என பெயரிடப்பட்டது. இதுவரை துங்கா-2, எந்த வழக்கு விசாரணையிலும் எங்களை ஏமாற்றியதில்லை, ஒருவேளை துங்கா, அந்த வீட்டுக்குச் சென்றிருக்காவிட்டால் நிச்சயம், ரங்கசாமி, ரூபாவைக் கொன்றிருப்பார்.

கடந்த ஆண்டுதான் துங்கா-2 பணியில் சேர்ந்துள்ளது. ரங்கசாமி, சந்தோஷ் குமாரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பல முறை எச்சரித்தும், தனது மனைவி, சந்தோஷ் குமாருடன் பேசுவதை நிறுத்தவில்லை என்ற ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாக ரங்கசாமி ஒப்புக்கொண்டுள்ளார்.

Tags :
KarnatakaPoliceSniffer dogTunga
Advertisement
Next Article