குட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவன், காப்பாற்ற சென்ற ஆசிரியர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இழப்பீடு அறிவிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே எலுவப்பள்ளி கிராமத்தில் பள்ளியின் அருகே இருந்த நீர் சேமிப்புக் குட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவரும், அவரை காப்பற்ற சென்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் உயிரிழந்த ஆசிரியர் மற்றும் மாணவனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் நித்தின் என்பவர் இன்று (5.03.2025) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பள்ளிக்கு அருகிலுள்ள தனியருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த நிலையில் மாணவனைக் காப்பாற்ற முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் கௌரிசங்கர் (வயது 53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில், உயிரிழந்த பள்ளி மாணவன் நித்தின் மற்றும் தலைமையாசிரியர் கௌரிசங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.