வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... 2 நாட்களுக்கு அடித்து வெளுக்கப் போகும் மழை!
தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஏப்.12ம் தேதி வரை மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று (ஏப்.7) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏப்.10-ம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்தது.
அதன்படி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையும் எனவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.