"இந்தியா-பிரான்ஸ் நாடுகளின் புத்திசாலித்தனம் நிறைந்த மனங்களின் சங்கமம்" - பிரதமர் மோடி உரை !
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10-ந்தேதி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். இதன்பின் பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டில், அந்நாட்டு அதிபர் மேக்ரானுடன் ஒன்றாக பங்கேற்றார். இந்த உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பாரீஸ் நகரில் நடந்த தலைமை செயல் அதிகாரிகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "இந்தியாவின் நிலையான கொள்கைகள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் தொழில் நுட்பம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் நவீனத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
இது, வர்த்தக நிகழ்ச்சி என்றில்லாமல், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் புத்திசாலித்தனம் நிறைந்த மனங்களின் ஒன்றிணைதல் ஆகும். புதிய கண்டுபிடிப்பு, ஒருங்கிணைத்தல் மற்றும் தரம் உயர்த்துதல், நோக்கத்துடன் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லுதல் ஆகிய மந்திரங்களை நீங்கள் ஆர்வத்துடன் பின்பற்றி வருகிறீர்கள். உள்ளரங்கத்தில் ஒருவருக்கொருவர் உரையாடி தொடர்பை ஏற்படுத்தி கொள்வது மட்டுமின்றி, அதனை கடந்து, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான மூலோபாய நட்புறவை நீங்கள் மீண்டும் செயல்படுத்தி வருகிறீர்கள்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தங்கள் மற்றும் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்துதல், விண்வெளி மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இது, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நேரம் என்றும் பிரெஞ்சு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் பங்கெடுக்கும் சந்தர்ப்பத்தில் இணையும்படி அழைப்பு விடுத்துள்ளார்".