மனநலம் சரியில்லாமல் சாலையோரம் திரிபவர்களுக்கு உதவும் கல்லூரி மாணவி!
நெல்லை மாவட்டம், வள்ளியூர் சுற்றுவட்டாரபகுதிகளில் கல்லூரி மாணவி சாலையோரம் மனநலம் சரியில்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு உடுத்த உடையும், உண்ண உணவும் கொடுத்து ஆதரித்து வருகிறார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவி. இவர்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிகாம் (B.Com) படித்து
வருகிறார். இவர் பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆதரவற்ற மற்றும்
மனநலம் சரியில்லாமல் சுற்றி திரிபவர்களை சந்தித்து அவர்களுக்கு உடுத்த உடை கொடுத்தும், உண்ண உணவு கொடுத்தும் ஆதரித்து வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் செய்து வரும் காரியம் அப்பகுதிகளைச் சேர்ந்தவர்களிடைய வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து ராகவி கூறும்போது,
"நான் திருநெல்வேலி கல்லூரியில் படித்துக் கொண்டு, வேலை பார்த்து வருகிறேன். எனது
குடும்பம் கஷ்டமான நிலையில் இருந்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டோம்.
தற்போது ஓரளவு நல்ல நிலையில் உள்ளோம். நான் செல்கின்ற வழியில் இது
போன்றவர்களை பார்க்கின்றேன். அவர்களும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்
என்று என் மனதில் தோன்றியது. எனது குடும்பம் மற்றும் நண்பர்கள் என் ஆர்வத்தை தூண்டினர். அதனால் இதை தைரியமாக செய்கின்றேன். வயதானவர்களுக்கு
அவர்களது மனநிலையைப் பொறுத்து அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து உதவி செய்வேன்" எனக் கூறினார்.