”2026-ல் கூட்டணி அமைச்சரவை அமையும்” - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு...!
மதுரை கூடல் நகர் பகுதியில் தேமுதிகவின் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருகிற 2026 சட்டசபை தேர்தலில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் போட்டியிட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
”தமிழகத்தில் ஆண்ட கட்சிக்கும் ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது தேமுதிக. தேமுதிகவினர் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். எஸ்ஐஆர் பணிகள் தமிழகத்தில் நடைபெற்ற வருகின்றது. தேமுதிகவின் அனைத்து நிர்வாகிகளும் தேமுதிக வாக்குகளை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளவர்கள் எஸ்.ஐ.ஆர்-ல் முறைகேடு நடப்பதாகவும், ஆண்ட கட்சியினர் முறையாக நடப்பதாகவும் கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நீங்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும். 2026 சட்டமன்றத்தில் கூட்டணி அமைச்சரவை அமையும். தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக அமைச்சரவையிலும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. விஜயகாந்த் முதல்வராகி இருந்தால் கூட ஊழல் குற்றசாட்டுக்களை வைத்திருப்பார்கள். ஆனால் அதுபோல எந்த குற்றச்சாட்டும் எழுந்துவிடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ அவர் கடைசி வரை எதிர்க்கட்சி தலைவராகவே இருந்துவிட்டார்” என்றார்.