வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை... நொடிப்பொழுதில் நடந்த சோகம்!
ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அடுத்த எடப்பளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (43). இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி வீனவானி. இவர்களுக்கு பிரகதீஷ் (5) மற்றும் தினேஷ் (1) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் குழந்தை தினேஷ் ( 1 வயது) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தினேஷ் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த தண்ணீர் பக்கெட்டில் தலைக்குப்புற விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : ‘கண்ணப்பா’ படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்… பின்னணியில் குடும்ப பிரச்னை.. இயக்குநர் விஷ்ணுமஞ்சு பரபரப்பு தகவல்!
விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணாததால் குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தலைக்குப்புற கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். தண்ணீர் பக்கெட்டில் நீர் இருந்ததால் அதில் மூழ்கி குழந்தை தினேஷ் மயக்க நிலையில் இருந்தார். அவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குழந்தைக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் முதல் பிறந்த நாள் விழா கொண்டாடியதாக கூறப்படுகிறது.