2 நாட்களாக சாலையோரம் நின்ற கார்... போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய
நெடுஞ்சாலையின் ஓரமாக ஹோட்டல் ஹைவே செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலுக்கு எதிரே உள்ள காலி இடத்தில் கடந்த 2 நாட்களாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரில் இறந்த நிலையில் ஆணின் உடல் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படியுங்கள் : Rain Alert | வெயிலுக்கு ரெஸ்ட் கொடுத்து என்ட்ரி கொடுக்கும் மழை… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுராந்தகம் போலீசார் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசார் சோதனை செய்தபோது காரின் 4 கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் அமல்ராஜ் (45) என்பதும், அவர் அமெரிக்கா மற்றும் ஆந்திராவில் ஆயராக பணியாற்றி இருந்ததும் தெரியவந்தது.
இவர் மதுராந்தகம் அருகே உள்ள அகிலி கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் சமீப காலமாக சோத்துப்பாக்கம் பகுதியில் வசித்து வந்ததும் கண்டறியப்பட்டது. இவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் மதுராந்தக போலீஸ் வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.