கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சியின் 70 அடி உயர சிலை திறப்பு!
அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி இன்று இன்று அதிகாலை 3 மணிக்கு கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். மெஸ்ஸியை காண்பதற்காக வந்த ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஆரவாரம் எழுப்பினர். இந்த நிலையில் கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்சியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்ஸி காணொலி மூலமாக இன்று திறந்து வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து மெஸ்சியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டு ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், நடிகர் ஷாருக்கான் உள்பட பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையடுத்து கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்டு மெஸ்ஸி பிற்பகல் ஐதராபாத்துக்கு செல்லும் நிலையில் இரவு காட்சி கால்பந்து போட்டியில் விளையாடுகிறார். தொடர்ந்து நாளை மும்பைக்கு செல்லும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள நிலையில் 15-ம் தேதி டெல்லிக்கு புறப்படும் அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார்.