பாகிஸ்தான் | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள முகமந்த் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே வேளையில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதேபோல், கைபர் பக்துங்வா மாகாணத்தின் இஸ்மாயில் கான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதன் மூலம், பாகிஸ்தானில் நடந்த இருவேறு துப்பாக்கிச் சண்டைகளில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இன்னும் பயங்கரவாதிகள் நடவடிக்கை இருக்கிறதா? என்று பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.