நெல்லையில் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி!
நெல்லை மாவட்டம் திடியூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்.
தொடர்ந்து சுகாதாரத்துறை மூலம் திடியூர் பகுதியில் ஒரே வளாகத்தில் செயல்படும் ஐந்து கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வெள்ளநீர் கால்வாயில் இருந்து எந்த விதமான சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கல்லூரிக்கு தண்ணீர் எடுத்து பயன்படுத்தியதும் காய்ச்சலுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. விலங்கு மற்றும் எலிகளின் ரத்தம், சிறுநீர் போன்றவைகள் தண்ணீரில் கலந்து இருப்பதன் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மற்றும் கொல்கலன்களை சுத்தப்படுத்த வேண்டும், கல்லூரி சமையல் அறை மெஸ் உள்ளிட்டவைகளை முறையாக புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி முதல்வருக்கு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் ஆறு பிரிவுகளை குறிப்பிட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை பரிந்துரைகளை முறையாக செய்ய தவறினால் நீதிமன்ற மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு உயிருக்கு ஆபத்தான வகையில் தொற்று நோயை பரப்புதல் என்ற பிரிவின் கீழ் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.