உ.பி : திருவிழாவில் மேடை சரிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் !
உத்தரபிரதேச மாநிலம் படக்ட் மாவட்டத்தில் சமண (ஜெயின்) மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் ஆண்டுதோறும் லட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். லட்டு திருவிழாவில் பத்கர்கள் லட்டுகளை கடவுளுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு லட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி மதவழிபாட்டு தலத்தில் மூழ்கில் கம்புகளால் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் 100க்கும் மேற்பட்டோர் ஏறி வழிபாடு நடத்த முயன்றுள்ளனர். அப்போது அதிக பாரம் தாங்காமல் மேடை சரிந்து விழுந்தது.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உள்ளூர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக தெரிவித்துக் கொண்டார்.