தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!
தெலங்கானாவில் ஏழு மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் கடந்த வாரம் போலீஸ் இன்ஃபார்மர்கள் என சந்தேகித்து பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து அங்குள்ள மாவோயிஸ்டுகளை பிடிக்க சல்பாகா வனப்பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த மோதலில், ஏழு மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிரேஹவுண்ட்ஸ் படைகள்(சிறப்புப் படை பிரிவு) சல்பாகா காட்டில் மாவோயிஸ்டுகளைக் கண்டறிந்து சரணடையுமாறு உத்தரவிட்டனர். ஆனால் மாவோயிஸ்டுகள் சரணடையவில்லை என்றும், அதற்குப் பதிலாக அந்த பிரிவை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

பின் பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் மாவோயிஸ்டு கமிட்டி தலைவர் பத்ரு (35) உட்பட, 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளிடம் இருந்த ஏகே 47, ஜி3 மற்றும் ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள் தவிர, மற்ற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
43 வயதான எகோலபு மல்லையா, 22 வயதான முசாகி தேவல், 23 வயதான முசாகி ஜமுனா, 25 வயதான ஜெய் சிங், 22 வயதான கிஷோர் மற்றும் 23 வயதான கமேஷ் ஆகியோர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.