For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை, எழும்பூரில் மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் வைகோ தலைமையில் நடைபெற்றது.
01:38 PM Jun 29, 2025 IST | Web Editor
சென்னை, எழும்பூரில் மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் வைகோ தலைமையில் நடைபெற்றது.
மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
Advertisement

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில், இன்று சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார்.

Advertisement

இதில் கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதனை எடுத்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன் விபரம் வருமாறு:

தீர்மானம் : 1

ஈரோட்டில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்ற கழகத்தின் 31 ஆவது பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தின்படி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் அரசு தொடர்ந்திடவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும், கழகம் எடுத்த முடிவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிப்பது என்று கழக நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 2

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றிருக்கும் மதச்சார்பற்ற, சோசலிச எனும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்டிராவை உருவாக்க முனைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் செயல் திட்டங்களை ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும்.

தீர்மானம் : 3

இந்தியா முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசின் நீர்வளத் துறை செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

அந்த நீரை அழுத்தத்தை பயன்படுத்தி உழவர்களின் வேளாண் பயன்பாட்டுக்காக அனுப்பும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். அங்கிருந்து உழவர்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தடி நீரைப் பெறலாம். எவ்வளவு நீரை உழவர்கள் பெறுகிறார்களோ, அவ்வளவு நீருக்கு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேளாண் பயன்பாட்டுக்கு விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டம் செயல்படுத்தப் போவதாக பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்தே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) உண்மை சரிபார்ப்பு அமைப்பு அளித்துள்ள விளக்கத்தில் இது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறது. ஆனால் மத்திய அரசின் நீர்வளத்துறை இது குறித்து உரிய விளக்கம் அளிக்கவில்லை. நாடு முழுதும் கொந்தளித்துள்ள உழவர்களின் கவலையைப் போக்க , வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

தீர்மானம் : 4

மதுரையில் ஜூன் 22ஆம் தேதி இந்துத்துவ அமைப்புகள் முன்னின்று நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட இயக்கக் கோட்பாடுகளை இழிவு படுத்தியும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்களை சிறுமைப் படுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெறச் செய்ததற்கு மறுமலர்ச்சி திமுக நிர்வாகக் குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் சமய நம்பிக்கையை அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்த நினைக்கும் பாஜகவின் முயற்சிகள் தகர்ந்து தவிடு பொடியாகும்.

தீர்மானம் : 5

பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழா மாநில மாநாடு செப்டம்பர் 15 அன்று திருச்சியில் நடத்துவது என கழகப் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கும், சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ஜூலை 17ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கும் மண்டல வாரியான கழக செயல்வீரர்கள் கூட்டங்களை திட்டமிட்டு சிறப்பாக நடத்துவதற்கு மாவட்டக் கழகங்கள் முனைந்து செயலாற்ற வேண்டும் என்று கழக நிர்வாக குழுத் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 6

தமிழகத்தில் மேல்நிலை வகுப்பில், பொறியியல், மருத்துவம், விவசாயம், கைவினைத் தொழில்கள் உள்ளிட்ட பல துறையின் உட்பிரிவான செவிலியர் பயிற்சி, பயிர் பாதுகாப்பு, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், தையல் உள்ளிட்ட 15 வகையான தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன.

தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவங்கியபோது, 4,000க்கும் மேற்பட்ட பகுதி நேர, முழுநேர, ஒரு பகுதி நேரம், இரு பகுதி நேரம் ஆகிய நான்கு நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 1978 இல் 4,324 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2007 இல் 250 பேருக்கு பணி நிரந்தரம் அளிக்கப்பட்டது. அதன்பின், இதுவரை புதிய நியமனம் நடைபெறவில்லை. இந்நிலை தொடர்ந்தால், 2030க்குள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவே இல்லாத நிலை உருவாகும்.

கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களே, தொழிற்கல்வி பிரிவை தேர்வு செய்கிறார்கள். இது, இடைநிற்றலைத் தவிர்க்கவும், சுயதொழில் துவங்கவும் வழிவகுக்கிறது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், அப்பணியிடத்தை நிரப்பக்கூடாது; அந்த பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடரக்கூடாது; அந்த ஆண்டோடு அப்பாடப்பிரிவை, மூட வேண்டும் என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கழக நிர்வாக் குழு வலியுறுத்துகிறது".

Tags :
Advertisement