ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்... வெறும் கண்களால் பார்க்கலாம் - எப்போது தெரியுமா?
6 கோள்கள் ஒரே நோ்க்கோட்டில் வரும் அதிசய நிகழ்வு ஜூன் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை நாம் வெறும் கண்களால் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய குடும்பத்தில் பூமி உட்பட அனைத்து கிரகங்களும் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில், வெவ்வேறு வேகத்துடன் சூரியனை சுற்றி வருகின்றன. இவ்வாறு சுற்றி வரும் கிரகங்களை நாம் பூமியில் இருந்து சில சமயங்களில் ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு மிகவும் அரிதாக அமைகிறது. பொதுவாக 3 அல்லது 4 கோள்களை ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
இந்த நிலையில் ஜூன் 3ம் தேதி கிழக்கு திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன், சனி ஆகிய 6 கோள்கள் ஒரே நோ்க்கோட்டில் வர உள்ளன. இதில் புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்களை நாம் வெறும் கண்ணால் பாா்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
யுரேனஸ் மற்றும் நெப்டியூனானது பூமியைவிட்டு தொலைவில் இருப்பதால் அதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது எனவும், தொலைநோக்கியின் உதவியுடன் பாா்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.