இரும்பு இறக்குமதிக்கு 50% வரி விதிக்கப்படும் - அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்தார். இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியை அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இதனிடையே வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்த பின் இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், "அமெரிக்காவில் இரும்பு இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த போகிறோம்.
இது அமெரிக்காவில் இரும்பு தொழிலை மேலும் பாதுகாக்கும். இன்று இங்குள்ள ஆண்களும் பெண்களும் அமெரிக்காவை சக்திவாய்ந்ததாகவும் வலுவாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கிறார்கள். இப்போது, இறுதியாக உங்களுக்காக உழைத்து உங்களுக்காகப் போராடும் அதிபராக நான் செயல்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இரும்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.