பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹிமுக்கு 50 நாட்கள் பரோல்! கடந்த ஓர் ஆண்டில் நான்காவது முறை பரோல்!
தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவரும், பாலியல் குற்றவாளியுமான குர்மீத் ராம் ரஹிமுக்கு மீண்டும் 50 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இருந்தவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர் தனது ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த ஆசிரமத்தின் மேலாளராக இருந்தவர், ரஞ்சித் சிங். கடந்த 2002 ஆம் ஆண்டுல் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார் என்றும் ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்ற விவரங்கள் பத்திரிகைகளில் வெளியானது. ஆசிரமத்தில் இருந்தே செய்திகள் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்மீத் ராம் ரஹிம் நம்பினார். இந்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு மர்மநபர்களால் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையும் படியுங்கள்: 4-வது டி20 போட்டி – பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி!
இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. பஞ்ச்குலா நீதிமன்றம் இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் மற்றும் 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. அதன்படி குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனையும் ரூ 31 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கிருஷ்னண் லால், ஜஸ்பிர் சிங், அவ்தார் சிங், சப்தில் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஹரியானாவின் ரோஹ்டக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் இருந்த குர்மீத் ராம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிணையில் வந்தார். இந்த நிலையில் அவருக்கு இரண்டு மாத இடைவெளியில் மீண்டும் 50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்த பரோல் காலத்தில் உத்தரபிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள தேரா சச்சா சௌதா ஆசிரமத்திற்கு செல்வார். அவர் கடந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை பரோலில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.