For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"உலகில் 4 கோடி பேருக்கு ஹெச்ஐவி பாதிப்பு" - ஐநா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

03:11 PM Jul 23, 2024 IST | Web Editor
 உலகில் 4 கோடி பேருக்கு ஹெச்ஐவி பாதிப்பு    ஐநா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
Advertisement

கடந்தாண்டில் உலகம் முழுவதும் சுமார் 4 கோடி மக்கள் ஹெச்ஐவி நோய் பாதிப்புடன் வாழ்ந்து வருவதாகவும், அதில் 90 லட்சம் மக்கள் எந்த சிகிச்சையும் எடுக்காமல் இருப்பதாகவும் ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து நேற்று (ஜூலை 22) ஐ.நா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சென்ற ஆண்டில் உலகம் முழுக்க 4 கோடி மக்கள் ஹெச்.ஐ.வி வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த உலகமெங்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் நிதிகள் கிடைக்காமல் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறைந்து, புதிய நோய்த் தொற்றுகள் உருவாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 6.3 லட்சம் மக்கள் எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் உயிரிழந்துள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டில் 21 லட்சம் மக்கள் உயிரிழந்ததே இதுவரையிலான அதிகபட்சமாகும். ஆனால், 2025-ல் உயிரிழப்புகள் 2.5 லட்சமாக குறையும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அவை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது என ஐ.நா- வின் எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுக்க ஒதுக்கப்பட்டு, பாகுபாடு காட்டப்படுபவர்களான பாலியல் தொழிலாளர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மட்டுமின்றி போதைப் பொருள் உபயோகிப்பவர்களும் கடந்த ஆண்டில் 55% ஆக உயர்ந்துள்ளனர். இது 2010-ல் 45% இருந்தது என கூறப்பட்டுள்ளது.

ஐ.நா எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் நிர்வாக இயக்குநர் வின்னி பியான்யிமா கூறுகையில், "உலகத் தலைவர்கள் எய்ட்ஸ் தொற்றை பொது சுகாதார அச்சுறுத்தலாகக் கருதி 2030-ம் ஆண்டுக்குள் அதனை ஒழிக்க உறுதியெடுத்துள்ளனர். அதன்படி, வருகிற 2025-ம் ஆண்டுக்குள் ஹெச்.ஐ.வி. தொற்றை 3.7 லட்சமாக குறைக்க உறுதியளித்துள்ளனர். ஆனால், 2023-ம் ஆண்டின் அறிக்கையின்படி புதிய தொற்றுகள் 13 லட்சமாக, கிட்டத்தட்ட 3 மடங்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்ஐவியை தடுக்க அதற்கான நடவடிக்கைகளை சரியான முறையில் எடுத்தால் மட்டுமே அனைவரையும் பாதுகாக்க முடியும்" என தெரிவித்தார்.

ஹெச்ஐவி சிகிச்சையில் முன்பைவிட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு ஊசி மூலம் 6 மாதங்கள் வரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்றும், ஆனால் ஆண்டுக்கு 2 ஊசிகளுக்கு ஆகும் செலவு இந்திய மதிப்பில் ரூ.33 லட்சம் வரை ஆகுமென்று ஐ.நா எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் இயக்குநர் சிசர் நுனெஸ் கூறியுள்ளார். மேலும், வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் இந்த மருந்துகளைக் குறைவான வருமானம் கொண்ட நாடுகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement