உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் 33 பேர் மீட்பு - 2வது நாளாக தொடரும் மீட்பு பணி!
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மணா என்ற கிராமம் உள்ளது. பத்ரிநாத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் இந்தியா-திபெத் எல்லையில் 3,200 மீட்டர் உயரத்தில் உள்ள கடைசி கிராமமாகும். இக்கிராமத்தில் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 6 வரை தீடிரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஏற்கெனவே அப்பகுதியில் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் பனிச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
பனிச்சரிவின்போது ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பணி செய்து வந்த 57 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய மீட்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து அம்மாநில பேரிடர் மேலாண்மை செயலாளர் வினோத் குமார் சுமர் செய்தியாளர்களிடம், பனிச் சரிவில் மொத்தம் எத்தனை பேர் சிக்கியிருக்கின்றனர் என்ற விவரத்தை கூறினார். அதன்படி 57 தொழிலாளர்களில் இருவர் விடுப்பில் இருந்ததால், பனிசரிவின்போது மொத்தம் 55 தொழிலாளர்கள்தான் பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதற்கிடையில் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு, அதன் பின்பு தொடங்கப்பட்டிருக்கிறது. 65க்கும் மேற்பட்ட மீட்பு பணியினரின் தொடர் போராட்டத்திற்கு பிறகு, பனிச்சரிவில் சிக்கியிருந்த 33 தொழிலாளர்களை மீட்டனர். இதில் சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவர்களுக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சையளித்து வருகின்றனர். தொடர்ந்து எஞ்சியிருக்கும் 8 பேரை மீட்பதில் இரண்டாவது நாளாக மீட்புபணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.