பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை - இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை கடற்படையினரால் கடந்த 16 ஆம் தேதி (16.01.2024) கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 18 பேரையும் இலங்கையின் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 16ஆம் தேதி மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கோரி இரண்டு விசைப்படகையும் கைப்பற்றின. மேலும் படகில் இருந்த 18 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது.
கைது செய்யப்பட்ட 18 மீனவர்களும், இலங்கையின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்கள் அனைவரையும் (ஜன.31) இன்றுவரை சிறைகாவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், சிறைக்காவல் தேதி முடிந்த போதும், மீன்வளத்துறையானது மீனவர்கள் மீது எவ்வித குற்றப்பத்திரிக்கையையும் தாக்கல் செய்யாததை அடுத்து பாம்பன் மீனவர்களை நீதிபதி விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 2 விசைப்படகுகள் மீதான வழக்கு விசாரணை மார்ச் 20-ம் தேதி நடைபெறும் என்று மன்னார் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.