16 விவசாய சங்கங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு!
தமிழ்நாட்டில் உள்ள 16 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாதக ஆகியவை களத்தில் உள்ளன. இந்த கட்சிகளின் கூட்டணிகளில் பல கட்சிகள் இணைந்துள்ளன.
இந்நிலையில் திமுக கூட்டணிக்கு புதிதாக 16 விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வீ.இளங்கீரன் தலைமையில், இந்திய விவசாயிகள் சங்கம் தனபதி, ஐக்கிய விவசாயிகள் சங்கம் சங்கரய்யா, சிபா கரும்பு விவசாயிகள் சங்கம் வாரணாசி ராஜேந்திரன், தற்சார்பு விவசாயிகள் சங்கம் பொன்னையா, உழவர் மன்ற கூட்டமைப்பு ஜீவகுமார், மதுரை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கம் மணிகண்டன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நல சங்கம் சுப்பிரமணியம் உட்பட மொத்தம் 16 அமைப்புகளின் பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணிக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், சமூக நீதிப் பேரவை, தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம், தஞ்சாவூர் மாநகர காய்கனி விற்பனையார்கள் சங்கம், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு, நம்மாழ்வார் இயற்கை விவசாயம் ஆகிய இயக்கங்களும் இந்திய கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணியில் உள்ளன. இந்நிலையில் விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் திமுக கூட்டணி இன்னும் வலுப்பெற்றுள்ளது.