“130 அணு ஆயுதங்களை காட்சி பொருளாக வைத்திருக்கவில்லை” - பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க மிரட்டல்!
பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து எடுத்தது. குறிப்பாக சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்தது உலக அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது. காரணம் சிந்து நதி பாகிஸ்தானு 80 % நீராதாரத்தை வழங்குகிறது. இதனிடையே ஒரு பக்கம் இரு நாடுகளுகளும் தங்களது பாதுகாப்பை எல்லை பகுதிகளில் அதிகரித்துள்ள நிலையில், போர் பதற்றம் நிழவி வருகிறது.
இந்த சூழலில் அண்மையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, சிந்து நதி விவகாரத்தில் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்தார். இது குறித்து அக்கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், சிந்து நதி பாகிஸ்தானுடையது, தண்ணீர் பாயும் இல்லையேல் இந்தியர்களின் ரத்தம் பாயும் என மிரட்டல் விடுத்தார். இதனிடையே ஒருபக்கம் பாகிஸ்தான் அரசு பஹல்காம் தாக்குதலில் இந்தியா வீண் பழி சுமத்துவதாகவும், இதில் நடுநிலை விசாரணை தேவை எனவும் வலியுறுத்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாசி இந்தியாவுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “அவர்கள் (இந்தியா) தண்ணீரை நிறுத்தினால், போருக்குத் தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள கோரி, ஷாஹீன் மற்றும் கஸ்னவி போன்ற ஏவுகணைகளை இந்தியாவுக்காக வைத்திருக்கிறோம். நாங்கள் 130 அணு ஆயுதங்களை காட்சி பொருளாக வைத்திருக்கவில்லை, அவை எங்கு இருக்கிறதென உங்களுக்கு தெரியது” இவ்வாறு அவர் கூறினார்.