தமிழ்நாடு, புதுச்சேரியில் தொடங்கியது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.
கடந்த மாதம் 12ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்பட்டு 17ம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து, திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் 3,58,201 பேர் மாணவர்கள். 4,13,998 பேர் மாணவியர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 21,875 பேரும் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனம் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்வு நடக்கும் நாட்களில் தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3,200 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. நிலையான பறக்கும் படையில் 1,135 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 43 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடியும். மாணவர்கள் விடைத்தாளில் தங்கள் குறிப்புகளை பதிவு செய்ய 5 நிமிடமும், கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் என 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது.