விருதுநகரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!
விருதுநகரில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் இருந்து அதிக அளவில் இலங்கைக்கு போதைப்பொருட்கள், பீடி இலைகள், மஞ்சள், பூச்சிக்கொல்லி மருந்து, அழகுப் பொருட்கள் ஆகியவை படகு மூலம் கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தருவை குளம் அருகே உள்ள கல்மேடு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து விஜய அனிதா தலைமையிலான காவல்துறையினர் கல்மேடு கடல் பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 40 மூடைகளில் பண்டல்களாக பார்சல் செய்யப்பட்டு இருந்த 1200 கிலோ பீடி இலை பண்டல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த வேன் டிரைவர் காளிராஜன் மற்றும் பந்தல்குடியைச் சேர்ந்த அஜித் பெருமாள் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.