வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!
கோவை, அடுத்த பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இருந்து ஏழாவது மலையில் சிவன், சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த சிவனை தரிசிக்க தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வன விலங்குகள் மற்றும் கால நிலை மாற்றத்தின் காரணமாக பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து நான்கு மாத மலையேற்ற காலம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதை அடுத்து வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை வெள்ளிங்கிரி கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாலையோரம் மற்றும் வனப் பகுதியில் ஆங்காங்கே வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதில் கடந்த 4 மாதங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 905 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டன. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் கோவையை தலைமை இடமாகக் கொண்டு ரீ கம்போஸ்ட், ரீ சைக்கிளிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் மறுசுழற்சி செய்யப்பட்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதற்காக மாற்றப்பட்டு உள்ளன.
குடிநீர் பாட்டில்களை தனியார் நிறுவனம் மறுசுழற்சி செய்யும், கடினமாக இருக்கும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் சாக்லேட் பேப்பர்கள் போன்ற பல அடுக்கு பிளாஸ்டிக்கை கூரைத்தாள்கள், கவரிங் தாள்கள் மற்றும் பிளாக் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் மாற்றப்பட்டு உள்ளது.
இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூபாய் 20 வசூல் செய்யப்படும், பின்னர் அந்த பாட்டிலை கொடுத்து விட்டு பணத்தை திரும்பி பெற்றுக் கொள்ளலாம், இதில் சில பக்தர்கள் மட்டுமே பாட்டிலை ஒப்படைத்து பணத்தை பெற்று சென்றனர். பலர் ஆங்காங்கே வனப் பகுதியில் பாட்டில்களை வீசி சென்று உள்ளனர் இதனை சேகரிக்கும் பணியில் வனத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
இதில் 11 டன் வரையிலான பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பப்பட்டு உள்ளது. பக்தர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதால் தான் தண்ணீர் பாட்டில்களை வனப் பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் பக்தர்கள் முறையாக பாட்டில்களை வனத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.