10 ஆண்டுகள்... 5300 அமலாக்கத்துறை வழக்குகளில் 40க்கு மட்டுமே தண்டனை!
உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் புயான் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, கடந்த 2014 முதல் 2024 வரை அமலாக்கத்துறை 5,300 வழக்குகளை பதிவு செய்துள்ளது என்று மத்திய அரசின் ஆவணங்களை சுட்டிக் காட்டி பேசினார். அதில் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும் அமலாக்கத்துறை வழக்கு விசாரணைகளில் அதிக தாமதம் ஏற்படுகிறது. அதனால்தான் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள நபருக்கு ஜாமின் என்பது உரிமை என்றும், சிறை என்பது விதிவிலக்கு என்று உச்ச நீதிமன்றம் கூறி பலருக்கு ஜாமின் வழங்கி வருகிறது என தெரிவித்தார்.
வழக்கு ஒன்றில் ஒருவரை காலை 10.30 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வரவழைத்த அதிகாரிகள் இரவு வரை காக்க வைத்துள்ளனர். அதன் பின்னர் அதிகாலை 3.30 மணி வரை விசாரணை நடத்தி காலை 5.30 மணிக்கு கைது செய்துள்ளனர். இந்த வழக்கை நாங்கள் ரத்து செய்து உத்தரவிட்டோம்.
இந்த தீர்ப்புக்கு பின்னர் அலுவலக நேரத்தில் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என்று தங்கள் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக நீதிபதி உஜ்ஜால் பூயான் தெரிவித்தார். மேலும், தண்டனை பெற்று தரும் சதவிகிதம் அதிகமானால் மட்டுமே அமலாக்கத்துறை மீதான மக்களின் சந்தேக பார்வை நீங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.