நாமக்கல்லில் இருந்து 1 கோடி முட்டைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி... தமிழ்நாட்டில் விலை உயருமா?
தமிழ்நாட்டில் முட்டை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் நாமக்கல். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தினசரியாக 5 கோடி கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினசரி சுமார் 60 லட்சம் முட்டைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு தினசரி சுமார் 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு மீதமுள்ள முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் முதல்முறையாக அமெரிக்காவிற்கு 1 கோடி முட்டைகள் நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அமெரிக்கா அனுமதி அளித்த நிலையில், முதற்கட்டமாக 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
தலா 4.75 லட்சம் வீதம், 21 குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்னர்களில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த முட்டைகள் அடுத்த வாரம் அமெரிக்கா சென்றடையும். அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி தொடங்கி உள்ளதால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனை மேம்படும் என முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளதால், இங்கு முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் முட்டை விலை உயரும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.