விருதுநகரில் லாரிகள் நேருக்கு நேர் மோதி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி விலக்கு பகுதியில், தூத்துக்குடியில் இருந்து பேப்பர் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள்
ஏற்றிக்கொண்டு கண்டெயினர் லாரி ஒன்று பழனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது, இதனால் மறுபக்கம் சாலையில் பாய்ந்த அந்த லாரி, பழனி நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதி பலத்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியில் பயணம் செய்த லாரி ஓட்டுனரும், சரக்கு லாரியில் பயணம் செய்த லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிரேன் உதவியுடன் நசுங்கி கிடந்த உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், விபத்து காரணமாக மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.